Monday, January 3, 2011

சபாஷ்,விஜய குமார்!

நண்பர்களே,


இது நிஜமான நிகழ்வா? அல்லது கற்பனையும் கருத்தும் நிறைந்த நண்பர் யாராவது வடித்தனுப்பிய செய்தியா என்பதை ஆராய்ந்து பதிக்க விரும்பாமல்,செய்தியின் சிறப்பறிந்து இங்கே பதிவு செய்ய முடிவு செய்தேன்.


இது நிஜம் என்றால் -


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் அவர்களுக்கு, ‘உலகத் தமிழர் மையம்’ வாசக  நண்பர்கள் சார்பாக ‘சபாஷ்’ என்று ஒருமி்த்த குரல் கொடுப்போம்.


அவரது துணிவையும் அதேசமயம் பண்பான சிந்தனையையும் பாராட்டுவோம்.


அவர் செய்த காரியம் தமிழகத்தின் ஒட்டுமொத்த குடிமக்களின் கௌரவத்தையும் தன்மானத்தையும் தரணிக்கு எடுத்துச் சொல்கிறது.



பத்திரிகையாளர் திரு.’நாணா’
 இந்தச் செய்தியை ‘இந்தியா டு டே’ தமிழ் வார இதழின் ‘ஆர்ட் டைரக்டரும்’ சிறந்த பத்திரிகையாளுரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.’நாணா’ அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார். அனுப்பியவரின் முக்கியத்துவம் கருதியும் செய்தியின் சுவாரஸ்யம் கருதியும் நமது உலகத் தமிழர் மையம்’வலைத் தளம் மற்றும் முக நூல் வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். .)


செய்தி இதுதான்:


Coutesy: Tamil  Source
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வழக்கம் போல் ஏமாளித் தமிழர்களின் இளிச்சவாயத்தனத்துக்கு சன்மானம் வழங்கும் நிகழ்ச்சி,அதுதான் நண்பர்களே ‘இலவச தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி’ ,தி.மு.க மாவட்டச் செயலாளர் திரு. பெரியண்ண அரசு (இதில் அரசு என்ற பெயர் எப்படி,எப்போது.யாரால் இணைக்கப் பட்டது? ஓ...எல்லாம் பகுத்தறிவு செய்த மாயமாக இருக்கிறதே!) தலைமையில் அண்மையில் (23.12.2010 அன்று) நடந்தது.


விழாவின் போது,பொதுமக்கள் முன்னிலியைல் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் நடந்து கொண்டிருந்த இந்த ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா’வின் போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.


அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?


துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமானமருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.


எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.


இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.


“ நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.


இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவுஅடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.


மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை.


இதுதான் நண்பர் திரு.நாணா எனக்கனுப்பியிருந்த மின்னஞ்சலின் சாரம்.


நண்பர்களே,
பத்திரிகையாளர் திரு.நாணா அவர்களுக்கு இங்கே நாம் நன்றியைத் தெரிவிப்பதுடன், சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டும்.அவை வருமாறு:


1. மாவட்டச் செயலாளரோ,அவருடைய கட்சியினரோ யாரும் விவசாயி
    விஜய குமார்  அவர்களுக்கு கல்லாடையோ சொல்லாடையோ
    போர்த்தாமல் விட்டது.


2. திரு.விஜயகுமார் திருப்பிக் கொடுத்த ‘இலவச வண்ணத் தொலைக்
    காட்சிப் பெட்டியைப் பிடுங்கி,தங்களுக்குள் அடித்துக் கொண்டு
    தூக்கிச் செல்லாதிருந்தது. ( “ச்சே....இந்தப் புத்தி நமக்கேன் வராமற்
    போய் விட்டது?” என்ற கழிவிரக்கம் காரணமாக இருந்திருக்குமோ?)


3. திரு.விஜய குமார் இந்த சம்பவத்தை இன்னொரு அரசியல் கட்சிக்குச்
    சாதகமாகமாற்றிவிடாமல் இருக்க வேண்டும்.


4. இதை ஏன் ஊடகங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?
  
இலவசத்துக்கு வசமாகாத கொத்தமங்கலம் விவசாயி, திரு. விஜய குமார் வாழ்க!


இவண்-
கிருஷ்ணன் பாலா
3.1-2011

2 comments:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

இவரே தமிழர்! இவரே இந்தியர்!!
இவரே நாட்டின் அருந்தவப் புதல்வர்..

-தேவமைந்தன்
http://kalapathy.blogspot.com

Krishna Moorthy said...

1000 விஐயகுமார்கள் இதை போன்ற செயல்களை செய்தால் 2020-ல் வெற்றி நமதே.....!!! இணைக்கு நன்றி