Sunday, May 15, 2011

நட்புடனும் நியாயத்துடனும் (எழுதுகிறேன் - தொடர்:6)

 அன்புக்கும் நட்புக்கும் இனிய நண்பர்களே,

வணக்கம்.

’நட்புடனும் நடு நிலையுடனும்’ என்று நடந்து முடிந்த தேர்தல் குறித்தான கருத்துப் படைப்பை இங்கே 14.5.2011 அன்று பதிவு செய்து நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதைப் படித்துத் தங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலித்து நண்பர்கள் பலரும் எனக்கு எழுதியுள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன.

இதில், திருமதி கல்யாணி ரகுராம் ”இதற்கு மாற்று வழி என்ன சொல்லுங்கள்? யார் அந்த அறிவுள்ள தலைவன்?” என்று கேள்வி எழுப்பிருந்தார்.’இந்தக் கேள்வி தனி ஒருவரின் உணர்வன்று; நாடு பற்றியும் நல்ல மாற்றங்கள் தேவை என்பது பற்றியும் சிந்திப்பவர்களின் கேள்வி’ என்பதால் இதற்கு எனது எண்ணங்களையும் பதிலாகச் சொல்வது தேவையாகின்றது.

ஆரோக்கியமான அரசியலுக்கும் அறநெறி ஆட்சிக்குமான வழிமுறைகள் என்ன என்பதை அறிவுடையோர் யாவரும் சிந்திக்க வேண்டியிருக்கிறது;அது ஒவ்வொருவரின் கடமையும்கூட.

எனவே, தேர்தல் பற்றிய விசாரத்தைத் தொடங்கிய.நான்,அதற்கான வழிமுறைகளையும் எனது கருத்தாகச் சொல்லியாக வேண்டும் அல்லவா?

இதோ,எனது சிந்தனைகளைத் தொகுத்து இங்கே சுருக்கமாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.இதைத் தீட்டுவதும் திட்டுவதும் அறிவார்ந்த நண்பர்களாகிய உங்கள் பொறுப்பு.

‘அரசியலில் அறிவுள்ள தலைவன் கிடைப்பதற்கு முன், நாட்டில் ஏற்படுத்தப் படவேண்டிய அரசியல் அமைப்பு மாற்றங்கள் இவையாக இருப்பின் அந்த அறிவுள்ள தலைவன் யார் வேண்டுமானலும் இருக்கலாம்’ என்பதே என் துணிபான எண்ணம்.
எனது கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பு இதுதான்:

1.முதலில் 49 ஓ’வை ஆதரிப்பது.

2. அப்பழுக்கற்ற .உயர் நீதிமன்ற-உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் (ஓய்வு பெற்றவர்கள்) குழுவின் கீழ் தேர்தலுக்கு நிற்போரின் தகுதிகளை ஆய்வு செய்து,தகுதி பெற்றவர்களை மட்டும் தேர்தலில் அனுமதிப்பது.

3.தேர்தலில் நிற்பதற்கென்ற தகுதிகளை முன்னதாகவே தேர்தல் கமிஷன் கண்டறிந்து கொள்ளவும்,இதற்காக, தேர்தலில் நிற்க விரும்புவோருக்கென்று ஓர் தனித் தேர்வாணையம் உருவாக்கி அதன் மூலம், நடத்தப்படும் தேர்வுகளில் பங்கு கொண்டு நாடு,மக்கள்,அரசியல் சாசனம்,சட்டமன்ற நடைமுறைகள் இவை பற்றிய ஞானமும் அறிவும் உள்ளவர்கள்’என்ற சான்றிதழ்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற அடிப்படைத் தேர்தல் விதிகளை ஏற்படுத்த வேண்டும்.

4.தேசம்,மக்கள் பணி,தனி மனிதர்களின் கடமையுணர்வு,கட்டுபாடான நேர்மை இவை பற்றிய அடிப்படை அறிவுத் தேர்வில் ‘தேர்வுச் சான்றிதழ்கள்’ பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க் முடியும் என்ற ஒரு சட்ட விதியை ஏற்படுத்தி,அத்தகைய அடிப்படைச் சான்றிதழ்கள் பெற்றவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும். தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்;தேர்தலில் வென்றவர்களுக்கான ஊதியம் தவிர அவர்கள் வேறு ஒன்றையும் சம்பாதிக்க முடியாதவர்களாகவும் அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தின் மூலம் மட்டுமே வாழ்நாள் முழுதும் வாழும் உத்திரவாதம் அளிக்கப் பட்டவர்களாகவும் தேர்தல் விதி முறைகள் கொண்டு வரப்படுதல். அதிகாரத்தில் இருக்கும் அவர்களைக் கடும் சட்டவிதிகள் மூலம் கண்காணிக்கவும் அதையும் மீறி .ஊழல் குற்றச் சாட்டுக்அலுக்கு ஆளானால் உடனுக்குடன் விசாரித்துத் தாமதமின்றித் தீர்ப்பளித்துத் தண்டனை வழங்கவும் உரிய சட்டங்கள் தேவை.

5.யாராயினும் குற்றச் சாட்டு நிருப்பிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாகவே அரசியலில் இருந்து நீக்கி,அவர்கள் சொத்துக்கள் முழுவதையும் அரசே கைக் கொண்டு இறுதி வரையில் அவர்கள் அரசு விடுதியிலேயே வாழும்படியும் அரசு தரும் உணவு,மருந்து இவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளவுமான கடும் சட்ட அமுலாக்கத்தைக் கொணர்வது;

6.ஊழல் செய்தவர்களை எக்காலத்திலும் தேர்தலில் நிற்கவோ,முறைமுகமாகக் கூட அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ சட்ட ரீதியாகத் தடை விதிப்பது; ஊழல் பேர்வழிகளின் நடத்தை நிரூபிக்கப் பட்டால் அவர்களுடைய சமுதாய ரீதியிலான உரிமைகள் அத்தனையையும் பறித்து, அவர்களை அரசின் பராமரிப்பின் கீழ் கொணர்வது (இதில் அரசு அதிகரிகளும் அடக்கம்)

7.ஜாதிகளுக்கு ஏற்ப வழங்கப் பட்டு வரும் சலுகைகளை நிறுத்திக் கொள்வதுடன் ,ஜாதிகளின் பேரில் எந்த இயக்கத்தையும் நடத்த அனுமதி மறுப்பது;மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை மட்டுமல்ல;கால வரம்பையும் நிர்ணயிப்பது

8.தனி மனிதனின் வருமானத்தில் உச்ச வரம்பைக் கொணர்வது.

9.அரசுக் கருவூலத்தைக் கொண்டு,இலவசங்கள் வாரி வழங்கி,தன் கட்சி,தன் குடும்பம்,தன் கூட்டம் இவற்றை வளர்த்துக் கொள்வதும், ,இதை ‘தான்’ செய்ததாகச் சுய தம்பட்டம் அடித்து அதன் மூலம் ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதுமான அயோகியத்தனமான அரசியல் கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது.

10.குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி அடையும் நிறுவனக்களையும் தனி மனிதர்களையும் மக்கள் மன்றம் முன்பு நிறுத்தி,தங்கள் வளர்ச்சிக்குரிய காரண காரியங்களை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்கான நீதி அமுலாக்கம்.

11. மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்டு விட்டதாகச் சொல்லி அரசியலில் கொள்ளையடிப்பதையும் அதிகார சுகங்களில் திளைக்கவும் திட்டமிட்டுச் செயல்படும் Extra Authority என்று சொல்லத்தக்கவர்களை வைத்துக் கொள்வதைக் கண்காணித்து மறைமுக அதிகார மையங்கள் செயல் படுவதைக் கடுமையாகத் தண்டிப்பது.

12.ஆட்சி நடத்தும் எவருமே தன்னை எஜமானர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாங்கைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்ட விதிகளைக் கொணர்ந்து,அவற்றை அமுல் படுத்தும் மக்கள் மன்றக் குழுக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பு கூழுக்கள் முதலானவற்றை சட்ட ரீதியாகச் செயல் பட அனுமதிப்பது

13.’ அரசியலில் அதிகாரம் பெற்றவர்கள் எஜமானர்கள் அல்ல;அவர்கள் மக்களின் சேவகர்கள்’ என்கிற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தும் கடுமையான சட்டங்களைக் கொணர்தல்.

14.பதவிப் பித்தில் அலையும் சமூக விரோதிகள் தாமகாவே தேர்தலில் நிற்க அஞ்சும் வகையில், உண்மையிலேயே ஒழுக்கமும் அறநெறிச் சிந்தனையும் மிகுந்தவர்கள் தேர்தலில் நிற்கவும் ஒரு சல்லிக்காசுகூட செலவு செய்யாமல் மக்கள் அவர்களைத் தேர்ந்து எடுக்கவுமான நடைமுறைகளைக் கொணர்தல்.

15.கல்வியை எங்கும் எதிலும் இலவசமாகச் செய்தல்.

16.ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தல்.

17.முதியோர்களின் அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்யும் அரசு நிர்வாகம்.

18..அனைவருக்கும் அரசு நடத்தும் இடுகாடும் சுடுகாடுமே கடைசிப் புகலிடம் என்பதைச் சட்டமாக்குவது

இவைபோன்ற சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய சித்தாந்த அரசியல் அணுகு முறைகளைச் சிந்திக்க மக்களைத் தூண்டுவோம்.

“நமக்குத் தொழில் கவிதை;நல்லவே எண்ணல்;நாட்டுக்கு உழைத்தல்;
இமைப் பொழுதும் சோராதிருத்தல்”

–இங்கே பாரதி சொன்னதையும் பகிர்ந்து கொள்கிறேன்:நண்பர்களே,நன்றி.

நட்புடனும் நியாயத்துடனும்-
கிருஷ்ணன் பாலா
15.5.2011

Saturday, May 14, 2011

நட்புடனும் நடுநிலையுடனும்! (எழுதுகிறேன்: தொடர்-5)

அறிவுசால் நண்பர்களே,
வணக்கம்.


"தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு,மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்” என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன்.


'தாங்க முடியாத அரிப்பைத் தீர்த்துக் கொண்டாக வேண்டும்’ என்ற தவிப்பில் கண்ணுக்குத் தட்டுப்படும் கொள்ளியை எடுத்துச் சொறிந்து கொள்வதைப் போல, தாங்க முடியாத கோபத்தைத் தீர்த்துக்கொள்ள,இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சிக்கே சரியாக வாக்களித்து விட்டனர் நம்பொது ஜனங்கள்.


அநீதியையும் அக்கிரமத்தையும் தண்டிக்கும் அஹிம்சை நெறியாக, ஜனநாயக முறையிலான வழியே தேர்தல் என்று வேண்டுமானால் நாம் பெருமை கொள்ள முடியுமே தவிர, அதுதான் ஒரே வழி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.


அஹிம்சை விவேகமானதுதான்; ஆனால், வீரமானது அல்ல;


ஏனெனில் முள்ளை முள்ளால் எடுக்கும் முட்டாள்தனம் அங்கே முளைத்துக் கொண்டிருக்கின்றது.


(செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டுகிறதே!)


நமது தேர்தல்கள், ஒரு திருடனைத் தண்டிக்கும் அதே சமயம் இன்னொரு திருடனையல்லவா மகா கெட்டிக்காரனாக மாற்றிக் கொண்டிருக்கின்றன?


’ஒரு திருடன் தண்டிக்கப்படும் திருப்தியில் இன்னொரு திருடன் திருந்தும்நிலை வருவதில்லை’ என்னும் வழக்கம் வந்து விட்டதே!


மானமும் வெட்கமும்கெட்ட கைதேர்ந்த நடிகர்களின் நாடகக் களமாக நமது அரசியல் முறைமை ஆகிவிட்டது.


காந்தியும் காமராஜர்களும் தேசமும் தேசபக்தியும் ஏட்டளவில் இடம் பெற்ற இலக்கண இலக்கியங்கள் ஆகி விட்டன; அவற்றைப் படித்துவிட்டு, இந்த நாடக அரங்கில் தங்கள் நடிப்புத் திறனைக் காட்டிக் கர கோஷத்தைப் பெற்றுவிடும் இந்த அரசியல்வாதிகளுக்கு ’பத்ம விபூஷண்கள்’ என்ன, ’பாரத ரத்னா’ விருதுகளையே வழங்கி விடுகின்றனர் மக்கள்.


இதற்கு அதிர்ச்சி வைத்தியம் தர எண்ணும் இந்திய இளைஞன் மாவோயிஸம் என்ற கூரிய கத்தியை எடுக்கும் புத்திக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளப் புறப்பட்டு விடுவதையும் நாடு பார்க்கிறதே!


நண்பர்களே,


ஒரு சுழற் காற்று சூறாவளியாக மாறிவிடும்போது, கோபுரக் கலசங்களும் சாயும்; குப்பைகளாகிய எச்சில் இலைகள்கூட கோபுரத்தின் உச்சியில் மண்டும்.


அதில் அந்த எச்சில் இலைகள் தங்களைக் கோபுரக் கலசங்களாக எண்ணி இறுமாப்புக் கொள்ளும் ஈனக்குணத்தை இங்கே இயல்பாகக் கண்டு வெட்கப்படுவதைவிட, நாம் வேறென்ன செய்து விட முடியும், இந்த ஜன நாயக்தில்?


அரசியலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலம், தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக,இறுமாப்புக் கொண்டு எக்காளம் இடுவதையே கடந்த காலங்கள் நிரூபித்து வந்ததைக் கண்டோம்; இனியும் அதையேதான் காண்போம்.


ஏனெனில், கலி காலம் முடிவுக்கு வரவில்லை;அது தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டு இயல்பாகத் தனது ஆட்சியைத் தொடர்கிறது.


எனினும்-


இந்தத் தேர்தலில் ஜன நாயகத்தின் பெயரால் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்; அது பண்புள்ளவர்களின் கடமை!


ஆனால், இன்று இவர்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் மக்களின் ஆரவாரத்தையும் அடுத்த தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்தி,கண்ணதாசன் சொன்ன வார்த்தைகளையே வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல நம் பொது ஜனங்களுக்கும் நினைவூட்டி நிற்போம்:


கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவைதான்:


’பணமும், பதவியும் மோசமானவை’ என்று ஞானிகள் ஏன் கூறினர்?
அவை வரக்கூடாதவனுக்கு வருவதாலும்; கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதாலும்தான்.


சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருப்பதால், சுடத் தெரிந்தவனும் அவனிடம் சரணடைகிறான்.


ஆட்சி, ஒரு முட்டாளின் கையில் இருந்தால், அறிவுள்ளவனும் அவனுக்கு
அடிமையாகிறான்.


விதை இல்லாமல் புல் முளைக்கிறது; வேரில்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேரும் இல்லாமல் அரசியல் முளைக்கிறது.


நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருப்தி செய்வதைத் தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஆனால்,ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே!


அழுத்தமான ஜனங்களைத் திருத்தியமைக்க அறிவுள்ள தலைவன் வேண்டும்.


நட்புடனும் நடு நிலையுடனும்-
கிருஷ்ணன் பாலா
14.5.2011

Monday, April 11, 2011

கலியுகத்தில் நான்! (பகுதி-1)


அகர முதல எழுத்தினைப் போல               
அநேக விஷயம் அதனதன் நிலையில்
சிகரம் தொட்டு,தர்மம் சிதைய
சிறுத்திடும் இந்தக் கலிகாலத்தை
நுகரத் தெரிந்தோர் நுண்மான் புலத்தால்
நுகர்ந்தும் பகர்ந்தும் நூல்பல தெளிந்தும்
அகத்தினில் கொண்ட உண்மைகள் யாவும்
அணிந்தவன் இங்கே உரைப்பது கேளீர்!


அத்தனும் அம்மையும் ஆசைப் பட்டதில்
ஆரம்பம் முதலே உயிர், சிறை பெற்றது;
பத்து மாதம் கருவறைச் சிறையில்
பட்டபின் உடலுள் வாழ்நாள் முழுதும்!
இரத்தமும் சதையும் வற்றிவிடாமல
இராப் பகலாக, உறங்கியும் விழித்தும்
நித்தமும் இரைப் பை நிரப்புவதல்லால்
நிஜமாய் இங்கு சாதிப்ப தென்ன?


ஒருநாள் கூட உணவில்லாமல்                                    
ஓட்டும் திறமை இல்லா திருப்பதும்
இருநாள் விழித்து உணர்வில்லாமல்
இயல்பாய் வாழ முடியாதிருப்பதும்
மரணம் என்பதை மற்றவர்க் கென்றே
மனம் தெளியாது கனவில் இருப்பதும்
ஒருநாள் விழித்து;உடலை வெறுத்து
உலகைக் கனவாய்க் காண்பதும் காண்பீர்!

சொத்தும் சுகமும் சேர்ப்பதற்கென்று
சுகத்தை இழந்து பித்தாய்த் திரிந்து,
மொத்தமும் ஆசைப் பற்றினில் வீழும்
மூட மனம்இதை யாரறிவாரோ?
வித்தை,விருந்து;வேடிக்கைச் சடங்கு
வேடம் போடும் நாடக வாழ்க்கை
எத்தனை காலம் நடக்கும் என்பது
இறைவன் எழுதும் காலக் கணக்கு!


வாழும்வரையில் காண்பது யாவும்
வரவோ செலவோ யாதும் இங்கு
சூழ்வது விதிப் பயன் என்றே நூலோர்
சொன்னதை மறந்து நின்றதில் கரைந்தேன்!
’ஊழ்வினை என்னை உலகினில் பிறக்க
உந்துதல் செய்தது’ என்பதை மறைக்கச்
சூழ்நிலை தோன்றி சூழ்ச்சி செய்தது;
சூழ்ச்சியில் நானும் தோற்றுப் போனேன்!


நானாய் விரும்பி வந்தேனில்லை;
நடுவழி வந்தபின் திரும்பிடத் தெரியேன்!
தானாய் எல்லாம் நடத்திக்கொண்டு
தனியாய் என்னைப் படைத்தனன் போலும்!
ஊனாய் உடலைப் பெற்றது முதலே
ஊர்ந்தேன்;தவழ்ந்தேன்;எழுந்தேன்;நடந்தேன்;
ஆனாலும்நான் உலகிற் பிறந்த
அவசியத்தையோ அறிந்தேன் இல்லை!


அங்கும் இங்கும் அலைவதும்;அலைந்து
அமைதியைத் தேடி உறங்கி எழுவதும்
எங்கும் எதிலும் ’நான்’ ‘நான்’ என்றே
என்னை முதலாய் எண்ணிக் கொள்வதும்;
பொங்கும் அலைபோல் புதுப்புதுக் கனவில்
புகுந்து,விழித்துப் புலம்பிக் கொள்வதும்
இங்கென் வாழ்க்கை இயல்பாய்ப் போனது;
இதைத்தான் இறைவன் எழுதி வைத்தானோ?

உண்ணவும், உறங்கவும் உறங்கி எழுந்து
உழலவும் உணரவும் ஆண்பெண் உறவை
எண்ணவும் ஏங்கவும் இலக்கில்லாமல்
இயங்கவும் மயங்கவும் இவையல்லாமல்
பண்ணிடும் வேறு காரியம் இங்கு
பலவிதம் இருந்தும் மனிதருக்கதனால்
புண்ணியம் ஏதும் பூப்பது உண்டோ?
பூமியில் இதைத்தான் புரியாதுள்ளேன்!


எத்தனை நேரம் மனிதர் மண்ணில்                     
இரவு,பகலாய் விழித்திட முடியும்?
எத்தனை காலம் இருந்து மண்ணில்
இரவை, பகலைக் கழித்திட முடியும்?
எத்தனை நாட்கள் பட்டினி இருந்து
இயல்பாய் மனிதர் வாழ்ந்திட இயலும்?
எத்தனை பணம்தான் இருந்திட்டாலும்
இரைப்பை இறுதியில் தருவது என்ன?


உண்ணல்,ஓய்தல்,உறங்கல்,எழுதல்
ஒவ்வொருநாளும் இவையே தொடர்தல்;
மண்ணில் இதுதான் நிரந்தர சுழற்சி;
மற்றெவை இந்த மாந்தரின் உடைமை?
உண்ணுதற்கெனவே உலகிற்பிறந்து
உடலை வளர்த்து,மண்ணில் புதையப்
பண்ணும் இந்தப் பம்பர வாழ்க்கை
பலயுகங் கள்எனச் சுழல்வதுதானே?

கடவுள் என்பதுநிஜமா?,பொய்யா?                                        
காரணமான கற்பனைப் பொருளா?
திடப் பொருளான வடிவம் உண்டா?
திரவப் பொருள்போல் உருவம் உடைத்தா?
ஜடப் பொருள் இந்த மானுடம் மற்றும்
ஜராசரம் அனைத்தும் சேர்ந்த வடிவா?
விடை தெரியாத குழப்பம்;எனினும்
விஷய ஞானிபோல் உரைசெய் கின்றேன்!

அண்டம் என்னும் அகண்ட வெளியில்                                       
அணுவெனத் திகழும் பூமிப் பந்தில்
அண்டிய இந்த மானுடப் புள்ளியுள்
அணுவிலும் அணுவாய் ஆகிய ஒருவன்
கண்டு வருவது கனவுகள்;அதில்தான்
காட்சிகள் இந்த மானுட வாழ்க்கை!
கண்கள் மூடினால் தான்நிஜம் தெரியும்;
கடவுளின் நோக்கம் யாதெனப் புரியும்!


அதுவரை எண்ணம் ஆயிரமாயிரம்;
அவற்றின் இடையே,குழப்பம்;தெளிவு
எதுவரை இந்த நாடகம் என்பது
இறைவன் பிடியில் இருக்கும் முடிவு!
இதனிடை நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து
அதனிடை வாழும் அரைகுறைப் பாமரன்
அறிவீர்;என்போல் நீங்களும் தானே!


தோற்றம்,வளர்ச்சி.தொடர்ந்து முதுமை
தோல்வியும் வெற்றியும் நிலைகொள்ளாமல்
மாற்றம் என்பது மண்ணில் தோன்றும்
மாந்தருக்கெல்லாம் மாறா விதிதான்!
ஆற்றலும் அறிவும் அறிவில்லாமையும்
அவனவன் விதியில் எழுதியபடியே
ஏற்றமும் இரக்கமும் ஏழ்மையும் செல்வமும்
இறைவன் வழங்கிய நன்கொடை; கண்டேன்!


எங்கோ இருந்த இவ்வுயிர் தன்னை
இப்புவி மண்ணில் இழுத்து வைத்தவன்
எங்கோ இருந்து எழுதிடும் நாடகம்;
இதில் என்பாத்திரம்;’நான்’ எனும் சூத்திரம்!
உங்களுக்குள்ளே இருக்கும் உணர்வுகள்;
உலக மக்களின் உள்ளங்கள் எல்லாம்
தங்கி இருக்கும் தத்துவம்; எனினும்
தனித்தனி நாடக அரங்கேற்றங்கள்!
                                                                                                                                                               
உலகம் எனக்கோர் நாடக மேடை;                     
உறவுகள்,நண்பர்கள் போடும் வேடம்;
பலப் பல விதமாய் காட்சிகள் மாற்றம்;
பாசம் நேசம்;மோசம்,நாசம்;
நிலையில்லாத நிஜமும் பொய்யும்
நினைவில் மலர்ந்து கனவாய் உதிர
தொலைதூரம்போல் மரணம்;ஆனால்
தொடரும் நிழலாய்அது என் அருகில்!

நடந்து முடிந்த நாடகக் கூத்தின்                                   
நாயகனாக நான் இருந்தாலும்
நடத்தி வைத்தவன் அவனே;எனது
நடிப்பின் இயக்கம் செய்தவன்;உண்மை!
நடக்கப் போகும் முடிவும் அவன்தான்
நான்அவன் கருவி;நலமும் தீங்கும்
கடந்த காலம்;என்செயல் களுக்குக்
காரணம் எல்லாம் அவன்தான்;கேளீர்!
                                                                            (தொடரும்)
-கிருஷ்ணன் பாலா
11.4.2011




Pray For Japan

உலகப் பொருளாதாரத்தையே


உருமாற்றிய தேசம்;

இன்று-

கலக்கத்தின் கரங்களில்
கரைந்து நிற்கின்றது!

கடல்கோள் அழிவை
கக்கிடும் அலைகளின்
கொடுமைப் பெயரைக்
குறித்த நாடு;


இன்று-


அதே-


கடல் அரக்கனின்
'சுனாமி’க்கரங்களில்


சிக்கி-

சின்னா பின்னபட்டு
விக்கித்து நிற்கிறது!

விரைவில்
அத் தேசம்


துன்பத்திலிருந்து
விடியலைப் பெறவும்;
அமைதியில் சூழ்ந்து
ஆறுதல் பெறவும்;
இழந்த உயிர்கள்

இறையடி நிழலில்
இரண்டறக் கலந்து
இன்பம் பெறவும்-
ஜப்பானுக்கு
ஜயம் உண்டாகவும்-

எல்லோரும் ஒன்றாய்
எண்ணித் தொழுவோம்;
எண்ணங்களாலே
இதயம் இணைவோம்!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
Published in Face Books-Notes on Sunday, 27 March 2011 at 23:23

Thursday, February 3, 2011

இந்தக் கானல் நீரில்….



 ‘மு நூல்’ (FACE BOOK) என்பது ஓர் சமூக வலைத் தளம். இதன் பயனாளிகள் ஒருவருக்கொருவர் சமூக நலனில் அக்கறை கொண்டு சமூக நலன் சார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்தும் பரிமாறியும், பரஸ்பரம் நண்பர்களாகி,உலகத்தையே ஒரு குடும்பமாகப் பாவிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த வலைத் தளம்,அதன் உண்மையான பயன்பாட்டை எட்டியுள்ளதா?

அதைப் பற்றிய நமது கண்ணோட்டம், இதே முக நூலில் பதிவு செய்யப்பட்டது. முக நூல் நண்பர்கள் நிறையப் பேர்களின் மனதிலும் பதிவாகி விட்ட கவிதை இது. நமதுஉலகத் தமிழர் மையத்தின்’ அறிவார்ந்த வாசகர்களின் கருத்துக்கும் வைக்கப் படுகிறது, இங்கே
:


இந்தக் கானல் நீரில்....
முகவரியின்றியும் முழுமையின்றியும்
முகத்தை மூடி எழுதிக் கொண்டிருக்கும்
முகநூல் நண்பர் அனைவரும் அறிய       
முகமன் கூறி எழுதுவ தாவது:

பலருக்கும் இதுவோர் எழுத்துப் பலகை;
பலவிதம் எழுதிப் பழகிக் கொள்கிறார்;
சிலருக்கு இதுவே சிந்தனை மன்றம்;
சிறிது ஞானம் தேர்ந்து கொள்கிறார்!

அரைகுறையாகப் படித்தோர்; மற்றும்
அறிவிலியாக இருப்போ ரெல்லாம்
தரக் குறைவாக எழுதித் தள்ளித்
தறுதலைக் கூட்டம் வளர்க்கின் றார்கள்!

கவிதை என்ற பெயரில் கிறுக்கி
கண்டதைச் சிலபேர் எழுதிக் காட்ட
செவிடன் சபையில் சிரிப்பதைப் போல
சிலபேர் அதனை ரசிக்கின் றார்கள்;

பண்டிதம் மிகுந்த படைப்பைச் சிலபேர்
பக்குவமாக எழுதிடும் போது
கண்டு ரசித்த குருடர்கள் போல
கருத்தினைச் சொல்லிப் புளகாங் கிப்பதும்;

சமூக மாற்றம்; சரித்திர உண்மை
சாதிப்பதுபோல் சில பேர் எழுத
சமர்புரிவதுபோல் வெகுண்டு சிலபேர்
சங்கம் முழங்கி அடங்கி விடுவதும்;

அறிஞர் சிலபேர் அறிவியல் கருத்தை
அவையில் வைத்து அலங்கரிப் பதுவும்;
குறிக்கோள் இன்றிச் சிலபேர் எழுதி
குமைந்து நெஞ்சம் வருந்து கின்றதும்;

ஆண், பெண் பேதம்; அவை மரியாதை
அடக்கம் மீறி நட்பினை நாடி
நாணம் இழந்து எழுதிக் கொள்வதும்
நான் பார்க்கின்ற நாடகம் இங்கு:

சுய நலத்தோடு எழுதி இங்கு
சொல்லும் பொருளும் பேசிடுவோரும்
பயனுள வகையில் பதிவுகள் செய்து
பலருடன் நட்பைப் பகிர்ந் திடுவோரும்;

காலை, மாலை வணக்கம் சொல்லி
'காமெடி’,பேசி மகிழ்ந் திடுவோரும்
 'வேலைமுகநூல் எழுதுவதென்றே
வெட்டிப் பொழுதைக்களித்திடுவோரும்

'முக நூல் சந்தைக் கூட்டம்என்றே
முழுதாய் உணர்ந்தவன்; மனதின் பதிவில்
இகழ்வோர்;புகழ்வோர் யாரும் நிஜமாய்
இல்லாதிருப்பது உண்மையு மாகும்!

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பதுகானல் நீர்தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!

எனினும்,படிப்போர் எவரும் இங்கு
என்னை உணர எழுதுதல் என் கடன்;
தனியொரு வழியில்;தமிழ் நெறிகாட்டித்
தவறுகள் களைந்திட எழுதுகிறேன்,நான்!


நேர்மையோ டிருந்து ;நாளும்
நிமிர்வுடன்  எண்ணி;புத்திக்
கூர்மையோ டெழுதி உண்மை
கூறுவ தெனது கொள்கை!

யாரும் எனக்குப் பகைவர் இல்லை;
யாருக்கும் தீங்கு செய்திட இயலேன்!
காரணம் இன்றி என்பால், இங்கு
காய்பவர் நண்பர் ஆவதும் இல்லை!

நிரந்தரம் என்று என்னை,நானே
நினைப்பவ னல்லன்;எனினும்,இங்கு
நிரந் தரமான எழுத்தாய் இருக்க
நிலையாய்க்  கருத்தைப் பதிவு செய்கிறேன்!

இந்தக்கானலில் எழுதுவ தென்பது
எழுத்து மீனை வளர்ப்பது போல!
முந்தி வருவோர் முயன்று பார்க்க;
முடிந்தால் அவர்களும் மீனை வளர்க்க!

இவண்-

கிருஷ்ணன் பாலா
2.2.2011